அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்படுவது இனிமேல் நடக்காது என நம்புகின்றோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் சுமந்திரன் எம்.பி, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் எந்த கைதுகளும் இடம்பெறவில்லை. சந்தேகத்தின் பேரில் யாரும் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம். அவசரகால சட்டம் அமுலில் இருந்தபோது விசேடமாக பயங்கரவாத தடைச்சட்டம் கீழ் கைது செய்யப்பட்டால் கைது செய்யப்படுபவரின் உறவினர்களுக்கு பற்றுச்சீட்டு ஒன்று கொடுக்க வேண்டும் என்ற தேவைப்பாடு இருந்தது. அவசரகால சட்டம் தற்போது அமுலில் இல்லை. ஆனாலும் சட்டபூர்வமான தேவைப்பாடு இல்லாதபோதிலும் கூட அந்த நடைமுறையை அவர்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டிருக்கிறோம். ஏனென்றால் கடத்தப்பட்டால் விசேடமாக பலர் காணாமல் போயிருக்கும் ஒரு சூழ்நிலையில் இவ்வாறான கைதுகளை அனுமதிக்கமுடியாது.
ஆகவே அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் விளைவாக இனிமேல் கைதுகள் நடக்காது என நம்புகிறோம் என்றார்.