அல்சர் வருவதைத் தடுக்க......!!!!!

முதலில் நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலைக்கு மாறிவிடுங்கள். இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைஅதிகப்படுத்துங்கள். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். அதிக இனிப்புப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் ஒதுக்குங்கள். கீரைகளில் மணத்தக்காளியும், காய்கறிகளில் முட்டைக்கோஸும் இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த உதவுகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது. சாப்பிட்டதும் படுக்கக்கூடாது.
எச்.பைலோரி கிருமி அசுத்தமான தண்ணீர் மூலம்தான் பரவுகிறது. ஆகவே, இதைத் தடுக்கச் சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம். புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, பான்மசாலா பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா, அலர்ஜி நோய்களுக்குத் தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
இரைப்பைப் புண் குணமாக, எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும். மன அமைதியும் ஓய்வும் மிக முக்கியம். இதற்குத் தியானம் செய்வது நல்லது, இரைப்பைக்கு வலு சேர்க்கும் யோகாசனங்களும் உள்ளன. தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர் ஒருவரின் உதவியுடன் இவற்றை முறைப்படி செய்துவர, இரைப்பைப் புண் வருவதைத் தடுக்கலாம்